Thursday 20 October 2016

கல்வி நேற்று இன்று நாளை

கல்வி நேற்று இன்று நாளை

எஸ். இளங்கோவன்



முன்னுரை

கல்வி கரையில கற்பவர் நாள் சில -தெள்ளிதின் ஆராய்ந்து
அமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து

-என்கின்றது ஒரு பழம் பாடல். ஆம்! கல்விக்குக் கரையில்லை. கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு, என்பது போலக் கல்வி முறை வளர்ந்தது வளர்கின்றது, வளர்ந்து கொண்டே போகின்றது. “கல்என்ற சொல்லுக்குத்தோண்டுஎன்பது பொருள். கிழங்கைக் கல்லி எடுத்து என்பது தமிழர்களின் பேச்சு வழக்காகும். ஆது போல மனிதனின் உள்ளத்தினுள்ளே மறைந்திருக்கும் சிறப்புப் பண்புகளை, நாகரீகத்தை, கலையை, கலாச்சாரத்தை, அன்பை, பண்பைத் தோண்டி வெளிக் கொணர்ந்து அதை அனைவர்க்கும் பயன்பட, பகிர்ந்தளிக்கும் வகை செய்வதே கல்வி என்பர் ஆன்றோர்.

மனித மனத்தில் மறைந்திருக்கும் அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து அவனைப் பண்பட்டவனாக்கும் ஒரு சாதனம் கல்வி என்பர் வேறொரு சாரார்.

ஆகனேப்பிரஜா தேச்கால்கர்ம சஜன்ம சதயாரம்
மந்த்ரோத ஸம்ஸ்காரே தசைதே குணந்தவ்

சாத்திரம், நீர், மக்கட் செல்வம், நாடு,காலம், செயல்கள், பிறவி, நினைவு, இறை வணக்கம், நற்பழக்கம் ஆகிய பத்தும் மனிதனின் இயல்பான குணங்களை வளர்க்கின்றன. இவை அனைத்துக்கும் அடிப்படையானது. இவ்வனைத்தையும் வளர்ப்பது கல்வியே ஆகும். கல்வி, செல்வம், வீரம் என்று சிறந்த முக்குணங்களில் கல்வியே சிறந்த முதன்மையான செல்வம் என்று கூறப்படுகின்றது. அத்தகைய கல்வி தமிழகத்தில் அன்றும் இன்றும் எப்படி இருந்தது? எப்படி இருக்கின்றது? நாளை எப்படி இருக்கும்? என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நேற்றைய கல்வி

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றுஎன்றார் ஒரு புலவர். கல்வி அத்துணை இன்றியமையாத ஒரு பொருளாய் இருந்தது. தமிழகத்தில். கல்வியைத் தேடி அலைந்தனர் அன்றைய மக்கள். சாதி, மத, இன பேதமற்று மக்கள் அனைவரும் கல்வி கற்ற காலமே சங்க காலம். முச்சங்கம் அமைத்து இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை ஆய்ந்தனர் சங்கப் புலவர்கள். பெண்கல்வி மறுக்கப்படாது, ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக கல்வியில் ஈடுபாட்டுடன் கல்வி பயின்ற காலம் அது. சங்கத்தமிழ்ப் பாடல்களாக நமக்குக் கிடைத்துள்ளவற்றுள் சுமார் 35 பெண்பாற் புலவர்கள் இடம் பெற்றுள்ளனர். கிடைத்துள்ளவற்றுள் மட்டுமே இத்தனை பேர் என்றால் கிடைக்காத நூல்களில் இடம் பெற்றவர் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ?

குருகுலப் பள்ளிகள்

கற்றோர் என்போர் கண்ணுடையோர் கல்லாதோர்
முகத்திரண்டு புண்ணுடையோர்

-என்று கூறிக் கற்றோரின் பெருமையை உணர்த்தியது தமிழகம். “வெள்ளத்தால் போகாது வெந்தணலில் வேகாதுஎன்று கல்வியின் அழியாத் தன்மையை உரைத்தும் அனைவரும் கல்வி பயில வேண்டியதன் பெருமையை உணர்த்தியது தமிழ்நாடு.

வட இந்தியாவைப் பின்பற்றித் தமிழகத்திலும் சில இடங்களில் குருகுலங்களும் செயல் பட்டதுண்டு. “அதங்கோட்டாசான் தலைமையிலான பள்ளியில் தொல்காப்பியர் படித்ததும்நாமறிந்ததே.

சமணர்களும், பௌத்தர்களும் வாழ்ந்த பள்ளிகளும், விகாரைகளும் பள்ளிக் கூடங்களாகவே செயல்பட்டன. சமணர்கள் வாழ்ந்த இடங்களில் நடத்தப்பட்ட பள்ளிகளில் இருந்தே இன்றையப் பள்ளி என்ற பெயரே வந்தது என்றும் கூறுவதுண்டு. பண்டையச் சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும் பள்ளிக் கூடங்களாகச் செயல்பட்டன என்றால் அது மிகையாகாது.

திண்ணைப் பள்ளிகளும் கோவில்களும்

பண்டைய தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும், சிற்றூர்களிலும் திண்ணைப் பள்ளிகள் இடம் பெற்றிருந்தன. பெருங்கோவில்களும், சிறு கோவில்களும் கல்வி நிலையங்களாகத் திகழ்ந்தன என்பதில் ஐயமில்லை. மடங்களும், கல்வி நிலையங்களாகவும் நூல்களைப் பாதுகாத்து வைக்கும்சரஸ்வதி பண்டாரங்களாகவும் திகழ்ந்தன. பண்டைய கல்வி முறைகளையும், பண்டைய நூல்களையும் பாதுகாத்து வைத்த பெருமை மடங்களையே சாரும்.

பயின்றவை

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”,

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு

- என்று கூறப்படுவதற்கேற்பப் பண்டைக் கல்வி முறையில் எண் எனப்படும் கணிதமும், எழுத்து எனப்படும் இலக்கிய இலக்கணங்களும் முக்கிய இடம் பெற்றிருந்தன. வாழ்க்கைக்கு ஓரளவேனும் தேவையான மொழியறிவும், கணித அறிவும் பெற்றிருத்தலே கல்வி எனப்பட்டது. கல்வி சிறந்ததது, புனிதமானது, கண்கூடாக உணர்தற்குரியது. மேலும் தர்ம நெறிக்குட்பட்டது, அழிவற்றது என்று கல்வியைப் போற்றினர்.

உயர் கல்வி கற்க வேண்டியிருப்போர், கடிகை அல்லது கல்லூரிகளில் பயின்றனர். சோழலிங்கபுரம் எனப்படும் சோளிங்கர், காஞ்சிபுரம், கடிகாசலம், எண்ணாயிரம் முதலிய இடங்களில் கடிகைகள் இருந்ததை அறிகின்றோம். காஞ்சிபுரம்கல்வியில் சிறந்த காஞ்சிமாநகர்என்றழைக்கப்பட்டது.


கல்வி முறைகள்

தமிழ், வடமொழி, வியாகரணம், மீமாம்சம், யானையேற்றம், குதிரையேற்றம் முதலான பலவகைக் கல்வி முறைகளும், அறுபத்து நான்கு கலைகளும் அக்காலகக் கல்வி முறையாக இருந்தன.

மதரசா, ஆங்கிலக் கல்வி முறை

இஸ்லாமிய அரசர்கள் இந்தியாவையும், தமிழகத்தையும் கைப்பற்றிய பின்னர் மதரசாக்கள் கல்வி நிலையங்கள் ஆயின. ஆங்கிலேயருக்குப் பின் மிசனரிகள் மூலமான கல்வி முறை ஏற்பட்டது. அக்கல்வியே ஆங்கிலம், வட்டார மொழி, கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் என வகைப் படுத்தப்பட்டது. தற்போதுள்ள கல்விமுறைக்கு முன்னோடியான கல்விமுறை உருவாக்கப்பட்டது.

மெக்காலே கல்வி முறை

லார்டு மெக்காலேவின் மூலம் மனப்பாடக் கல்வி முறை உருவாக்கப்பட்டது. இக்காலக் கல்வியின் மற்றொரு பெயர் குமாஸ்தாக் கல்வி முறை எனலாம். இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான வெற்றுப் படிப்பாளிகளும், வீணான பட்டதாரிகளும் உருவாயினர், இவர்கள் எத்தனை பட்டங்கள் பெற்றிருந்த போதிலும், தங்களால் சுயமாக எதுவும் செய்ய இயலாத வெறும் படிப்பாளிகளாய் இருந்தனர்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்

என்று பாடிய தமிழகத்தில் எத்தொழிலும் தெரியாத பல்லாயிரம் படித்தவர்களை உருவாக்கியதே மெக்காலே கல்வி முறையின் சிறப்பு எனலாம்.

தாய்மொழி இழந்த சிறப்பிடம்

பல்லவர் காலத்திலிருந்தே கல்வியில் தமிழ்மொழி சிறிது சிறிதாக ஒதுக்கப்பட்டு வடமொழி ஏற்றம் பெற்றது என்பர். சோழர் காலத்தில் தமிழ் ஏற்றம் பெற்றிருந்தாலும் வடமொழிக்கு மிகுதியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை யாராலும் மறுக்க இயலாது.

இஸ்லாமிய அரசர்கள் காலத்தில் அரபி, துருக்கி, உருது, பாரசிகம் முதலிய மொழிகளும், விஜய நகர அரசின் காலத்தில் தெலுங்கும், கன்னடமும் கல்வி மொழிகளாக மிளிர்ந்தன. தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலமே முக்கிய மொழியாயிற்று. இன்றும் அந்நிலை நீடிக்கின்றது என்றாலும் தமிழக அரசுகளின் முயற்சியால் தமிழ் வழிக் கல்வி வளர்ந்து வருகின்றது என்பதில் ஐயமில்லை.


கல்விக் குழுக்கள்

கோத்தாரிக் கல்விக்குழு, டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் கல்விக்குழு, இராதா கிருஷ்ணன் கல்விக் குழுக்களின் மூலம் கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டதோடு, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு பள்ளி என்ற அளவிலாவது பள்ளிகள் உருவாக்கப்பட்டு கல்வி கற்றோர் தொகை அதிகரிக்கப்பட்டது. தற்போதைய தமிழகத்தில் சுமார் 75 சதவீதம் மக்கள் கல்வி கற்றவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விச் சலுகைகள்

இன்று கல்விக்கெனப் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இலவசக் கல்வி, மதிய உணவுடன் கூடிய பள்ளிக்கல்வி, இலவசக் காலணி, இலவசச் சத்துணவு, இலவசச் சீருடை, இலவசப் புத்தகங்கள், இலவச மிதிவண்டி, கல்லூரிப் படிப்பு வரை இலவசக் கல்வி என்றெல்லாம் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதன் மூலம் கற்றோர் தொகை பெருகவும் கல்வி வளர்ச்சி ஏற்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்விப் பரவல்

வெறும் பி.. எம்.. என்றிருந்த படிப்புமுறைகள் எல்லாம் இருபதாம் நு}ற்றhண்டின் பிற்பகுதியிலும், இருபத்தோராம் நு}ற்றhண்டின் முற்பகுதியிலும் மாற்றமடைந்துள்ளன. புதுவகையான கல்வி முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனைக் கல்விப் பரவல் அல்லது கல்வி வெடிப்பு (EDUCATION EXPLOSIVE) என்றே கூறலாம். புதிய துறைகள், புதிய வேலை வாய்ப்புகள். கல்லூரிகளே இல்லாத ஊரோ நகரமோ இல்லை என்றே எண்ணும் அளவிற்குத் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகள் எனக் கல்வி விழிப்புணர்வும், கல்விப் பரவலும் ஏற்பட்டுள்ளது.

மாணவர் மையக் கல்வி

பண்டைக் காலத்தில் ஆசிரியர் மையக் கல்வி முறை இருந்தது. தற்போது மாணவர் மையக் கல்வி என்ற முறை உருவாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களைச் சிறந்த கல்விுயாளர்களாக உருவாக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

கணினி வழிக் கல்வி

கணினியின் மூலமாகக் கல்வி பயிலும் முறையும், கணிணியைப் பற்றிப் பயிலும் கல்வியும் சிறந்த கல்வி முறைகளாகக் கருதப்படுகின்றன. அனைத்துப் பாடங்களையும் கணினியில் பதிப்பித்து அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆளுக்கொரு கணினியைத் தந்து கல்வி பயிற்றுவிக்கும் முறை கூடிய விரைவில் வழக்கில் வந்து விடும் காலம் வெகு தொலைவில் இல்லை, இதன் மூலம் மாணாக்கர்கள் தாங்களே கல்வி பயின்றிடுவர். ஆசிரியர்கள் ஒரு பயிற்றுநராக இன்றி ஒரு நெறியாளராக மட்டுமே இருப்பர். இன்னும் சொல்லப் போனால் ஆசிரியரே தேவையில்லாத கல்வி முறை நாளை உருவாகவும் கூடும்.

தகவல் தொழில் நுட்பம்

கணினி அறிவியல் முதலாகக் கல்வி முறைகள் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதால் தற்போது அக்கல்வி முறைகளுக்கும், மருத்துவம் மற்றும் பொறியியல் துறை படிப்புகளுக்கும் மிகுதியாக வேலை வாய்ப்புகள் இருப்பதால் இக்கல்வி முறைகள் மிக்க முக்கியத்துவம் பெற்றுள்ளன.

தொழில்நுட்ப வழிக் கல்வி

கணினிக் குறுந்தகடுகள் மூலம் கல்வி பயிலும் முறைகள் வழக்கத்துக்கு வந்துள்ளன. வகுப்புகளில் சில தொலைக்காட்சித் திரைகளை வைத்து அதன் மூலம் கணினி வழிப் பட மற்றும் பாடக் காட்சிகளை ஒளி & ஒலி பரப்பி கல்வி கற்க வைக்கும் முறைகளும் வழக்கத்தில் வந்துள்ளன.


கல்வி பயிற்றுவித்தலில் ஊடகங்கள்

தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள் முதலியன தற்காலத்தில் கல்வி பரப்பும் ஊடகங்களாகப் பயன்படுகின்றன. அதன் மூலமும் கல்வி வளர்ச்சி பெருகி வருகின்றது. கல்விக்கெனவே தனித் தொலைக்காட்சி அலைவரிசையும், தனித் தொலைக்காட்சி அலைவரிசையும், தனிச் செயற்கைக் கோள்களும் கூடத் அமைக்கப்பட்டுள்ளன.

இணைய தளங்கள்

இணையம் எனப்படும் புதிய ஊடகத்தின் வழியாகவும் புதிய முறையில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்கான இணைய தளங்கள் சில உருவாக்கப்பட்டுள்ளன. இணைய தளங்களிலுள்ள கல்விப் பயன்பாடுகள் தற்காலத்தில் ஓரளவே பயன்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.

இணையப் பல்கலைக் கழகங்கள்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு இணையப் பல்கலைக்கழகம் முதலியன தொலைத் தொடர்பிலும், இணையத்திலும் செயல்படும் பல்கலைக் கழகங்களாகும். மேலும் பல பல்கலைக் கழகங்களும் இணையத்தில் இடம் பெற்றுள்ளன. கல்லூரிக்குச் செல்லாமலே கல்வி பயிலும் முறையும் பட்டங்களும், பட்டயங்களும் பெறும் முறைகள் வருங்காலத்தில் உருவாகும் எனலாம். இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே கல்வி எனப் பரவலாகும் முறையும் தோன்றிடும் என்பதில் ஐயமில்லை.

அஞ்சல் வழிக் கல்வி

ஓரளவேனும் படித்தோர் கூட இன்று அஞ்சல் வழிக் கல்வியில் பயின்று வருகின்றனர். வருங்காலத்தில் படிக்காதவர்களும், பள்ளியையே மிதிக்கதாதவர்களும் கல்வியில் சிறந்தவர்களாகும் காலம் வந்து கொண்டுள்ளது. அனைத்து வகைக் கல்வி முறைகளும் ஊடகங்கள் மூலமே பயிலப்படும் நிலை வருங்காலத்தில் உருவாகும்.

நம் தமிழ்நாட்டில் கல்வி கற்காதவர் ஒருவர் கூட இல்லை என்கிற நிலை விரைவில் வரும். கூடவே நம் தமிழ்நாட்டின் வளமும் உயரும் என்று நம்பிக்கை கொள்வோம்.

*****


5 comments:

  1. மிக நல்ல கருத்து

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  3. அருமை.கல்வியை பற்றிய ஏராளமான‌ தகவல்கள் கிடைக்கப்பெற்றேன்.. நன்றி

    ReplyDelete